பாரதிதாசன் கவிதைகள்



கனியிடை ஏறிய சுளையும் -- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், -- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் -- தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், -- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
பொழிலிடை வண்டின் ஒலியும் -- ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், -- வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் -- பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவனேனும், தமிழும் -- நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!
பயிலுறும் அண்ணன் தம்பி, -- அக்கம்
பக்கத்துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை -- என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை, குயில்போல் பேசிடும் மனையாள், -- அன்பைப் கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம் -- தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !


தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ