பாரதிதாசன் பெண் கவிதைகள்



பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா

புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா உரைத்த
பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!
அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!

அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
சூக்ஷீமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!

கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
இரண்டுருளையால்நடக்கும் இன்பவாழ்க்கை!

251  likes

கைம்மைக் கொடுமை

கண்கள் நமக்கும் உண்டு -- நமக்குக்
கருதும் வன்மை யுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் -- தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத -- புதுமை
எதிரில் காணுகின்றோம்
கண்ணிருந்தென்ன பயன்? நமக்குக்
காதிருந்தென்ன பயன்?

வானிடை ஏறுகின்றார் -- கடலை
வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே -- உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் -- நாமதை
வேடிக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவைபோல் -- இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை.

புழுதி, குப்பை, உமி -- இவற்றின்
புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே -- அவற்றைப்
பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டாம் -- நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் -- நமக்கோ
அழுகிய பழத்தோல்!

கைம்மை எனக்கூறி -- அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் -- இதய
நடுவிற் பாய்ச்சுகின்கிறோம்.
செம்மை நிலையறியோம் -- பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்;
இம்மை இன்பம் வேண்டல் -- உயிரின்
இயற்கை என்றறியோம்.

கூண்டிற் கிளிவளர்ப்பார் -- இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவார்,
வேண்டியது தருவார்; -- அவற்றின்
விருப்பத்தை அறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் -- அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை -- ஐயகோ,
அடிமைப் பெண்கதியே!

279  likes

கைம்பெண் நிலை

கண்போற் காத்தேனே -- என்னருமைப்-
பெண்ணை நான்தானே (கண்)

மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் -- பிணமகனாயினன்
குணவதி வாழ்க்கை எவ் -- வணமினி ஆவது? (கண்)

செம்பொற் சிலை, இக் காலே
கைம் பெண்ணாய்ப் போன தாலே
திலகமோ குழலில் -- மலர்களோ அணியின்
உலகமே வசைகள் -- பலவுமே புகலும் (கண்)

பொன்னுடை பூஷ ணங்கள்
போக்கினாளே என் திங்கள்!
புகினும் ஓர் அகம் சகுனம் தீதென
முகமும் கூசுவார் -- மகளை ஏசுவார்! (கண்)

தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
தாலியற்றவள் -- மே லழுத்திடும்
வேலின் அக்ரமம் -- ஞாலம் ஒப்புமோ? (கண்)

வருந்தாமல் கைம்பெண் முகம்
திருந்துமோ இச்சமுகம்
மறுமணம் புரிவது -- சிறுமைஎன்றறைவது
குறுகிய மதியென -- அறிஞர்கள் மொழிகுவர் (கண்)

275  likes